உளறிய மேயர்... நெருக்கடியில் திமுக; முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு!


உளறிய மேயர்... நெருக்கடியில் திமுக; முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு!


சென்னை மாநகராட்சி10வது மண்டலம், 127வது வார்டு முதல் 142வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை மாநகரமேயர் பிரியா ராஜன்கடந்த மே மாதம் 6ம் தேதி ஆய்வு நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் மேயர் பிரியா ராஜன் தலைமையில், கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது, அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தரமான முறையில் வழங்க வேண்டும் என, மேயர் பிரியா ராஜன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரையுடன் கூடிய உத்தரவுகளை வழங்கினார்.

இதன் பின்னர் மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்கள் முறையாக செயல்படாமல் உள்ளன. அவை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை பெருந்தன்மையோடு நடத்தி வருகின்றோம். பல இடங்களில், அம்மா உணவகங்கள் மக்கள் பயன்பாடு இன்றி பூட்டிக்கிடக்கின்றன. இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.

இதனை சற்றும் எதிர்பாராத துணை மேயர் மகேஷ்குமார் உடனே குறுக்கிட்டு, ‘ஒரு அம்மா உணவகத்தினால் மாநகராட்சிக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது’ என்று கூறி சமாளித்தார்.

அம்மா உணவகங்கள் பயன்படுத்தப்படாமல் பூட்டி கிடப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அதிமுக, அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு, திமுக அரசை வெகுவாக குற்றம்சாட்டி இருந்தன.

மேயர் பிரியா அளித்த இந்த பேட்டி தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக திமுக தலைமைக்கு ஏராளமான புகார் சென்றது. இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரையில் செய்தியாளர்களை சந்திக்க கூடாது என, மேயர் பிரியாவுக்கு திமுக தலைமை உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த மே 6ம் தேதிக்கு பின்னர், பொது நிகழ்ச்சிகளில் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டாலும் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog